விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளரும், ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க (Chandana Ekanayake) இதனை தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து நான்கு கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களுக்கு சிறைச்சாலைக்குள் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இவர்களில் மெகசின் சிறையில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரும், மற்றும் ஒரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகளின் திறமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அவர்களை சமூகமயப்படுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.