இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இலங்கையில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். தற்போதைய அதிபரான ராஜபக்சே கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி, முதல் முறையாக அதிபராக பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதி கட்டப்போரில் அரசுப்படைகள் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அவரது செல்வாக்கு உயர்ந்ததால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். அதன்படி 2010-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற அவர், 2-வது முறையாக மீண்டும் அதிபரானார்.
இந்தநிலையில் அதிபரிடமே ஏராளமான அதிகாரம் இருக்கும் வகையில் அரசியல் சட்டத்தை அவர் மாற்றியமைத்தார். இதைத்தொடர்ந்து இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் அதிபரின் குடும்பத்தினர் காலூன்ற தொடங்கினர்.
மேலும் 2 முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வரைமுறையை நீக்கினார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க அவர் திட்டமிட்டார்.
இந்த காரணங்களால் அதிபர் மீதான அதிருப்தி மக்களிடம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆளும் கட்சியினரின் அராஜகங்கள், விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் அதிபர் ராஜபக்சேவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.