திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு முயற்சி பங்குதாரர்கள் உடன்படிக்கையில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கும் (CEB) இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்திற்கும் (NTPC) இடையில் இன்று மாலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
திருகோணமலை, சம்பூரில் உள்ள சூரிய சக்தி பூங்கா தொடர்பான ஆரம்ப விவாதங்கள், இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய எரிசக்தி நிறுவனமான NTPC லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையில் பெப்ரவரி மாதம் ஆரம்பமானது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 50 மெகாவாட் சோலார் பூங்காவை திறப்பதற்கான சாத்தியம் குறித்து, தனியார்-பொது கூட்டுஒப்பந்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் குறித்த புதிய புதுப்பிக்கத்தக்க மின் நிலையம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்கத்தின் தற்போதைய 50 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் நிலைய முயற்சியின் கீழ் இந்த சோலார் பார்க் திட்டம் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTPC லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்திப் பயன்பாடாகும், இந்தியாவில் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 60,000 மெகாவாட் ஆகும். இந்நிலையில் சர்வதேச சோலார் கூட்டணியின் கீழ் குறித்த புதிய சூரிய சக்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.