இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பின் போது தம்மால் கூறப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கு்ம் பதிலின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று காலை இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
நாடு முன்னோக்கி செல்வதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் 20வது அரசியலமைப்பு திருத்தம் என்பன இரத்து செய்யப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் மற்றும் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகள் சங்கம், 15 அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட தேசிய ஐக்கியத்தின் இடைக்கால அரசாங்கத்தை நிறுவ முன்மொழிந்துள்ளது.