தமக்கு தர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக இளைஞன் ஒருவரை அடித்து மோசடியான முறையில் அவரிடம் கடிதம் பெற்ற இளைஞர்கள் மூவரை தாம் கைது செய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைத்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில்
வவுனியாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கொடுக்க வேண்டிய பணத்திற்காக குறித்த இளைஞனை தொலைபேசியில் அழைத்து மறைவான இடத்தில் வைத்து தாக்கி மோசடியான முறையில் கடிதம் மற்றும் குறித்த இளைஞனின் மோட்டர் சைக்கிள் என்பவற்றை பெற்றுக் கொண்ட மூவருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை எமக்குமுறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வவுனியா குருமன்காடு பகுதியில் உடல் வலுவூட்டல் நிலையம் ஒன்றை நடத்தும் நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை (30) விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரகைளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.