அமெரிக்காவில் கடும்பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் முடங்கின. 6,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நியூயார்க் நகரம், வடகிழக்கு அமெரிக்க நகரங்களில் பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூஜெர்சி, மைனே, நியூஹம்ப்ஷயர் மாகாண நகரங்கள் குளிர்புயலின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. வடகிழக்கு பகுதியில் பனிப்புயல், இதுவரை வரலாறு கண்டிராத அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. பல இடங்களில் பனிப்புயல் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இருக்கும்.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பல இடங்களில் பனிப்பொழிவு 15 அங்குல அளவுக்கு இருக்கும்.
கடலோரப்பகுதிகளான கேப் காட், லாங் தீவு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டனிலும் இதே நிலைதான் என கூறப்படுகிறது.
நியூயார்க் நகரில் நேற்று அவசர கால வாகனங்கள் தவிர்த்து பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நியூயார்க், பாஸ்டன், மசாசூசெட்ஸ் பகுதிகளில் சுரங்க ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்க ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. பயண தடை காரணமாக நகரங்கள் முடங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. சகஜ வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.