அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 4 மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் , நாளை முதல் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இன்றைய போராட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் எதுவும் கிடைக்கப் பெறாமையின் காரணமாகவே நாளை சகல மாகாணங்களிலும் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள பல பிரதான வைத்தியசாலைகளிலும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு சமாந்தரமாக துறைமுக சேவையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க உறுப்பினர்களால் சட்டப்படி வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதோடு, வங்கி உத்தியோகத்தர்கள் கருப்பு நிற ஆடையணிந்து பணிக்கு சமூகமளித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை, மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இவ்வாரம் முதல் தொடர் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ள தீர்மானித்தன.
அதற்கமைய நேற்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார நிலையங்கள் , வைத்தியசாலைகள் உள்ளிட்ட சகல மருத்துவ சேவை நிலையங்களில் வைத்தியர்கள் , சிற்றூழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல பிரதான வைத்தியசாலைகளில் மருந்து வழங்கல் உள்ளிட்ட எந்தவொரு வெளிநோயாளர் சேவைகளும் இடம்பெறவில்லை. அவசர சிகிச்சை பிரிவுகள் மாத்திரமே இயங்கின. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தினால் உரிய தீர்வு வழங்கப்படாமையின் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை நாளை புதன்கிழமை துறைமுகம் , வைத்தியர்கள் , தாதிகள் , நீர் வழங்கல் , மின்சாரம் , ஆசிரியர் சங்கம் , வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.