அமெரிக்கா சிகாகோவில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார்.
திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார். 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார்.
இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான். இதைபார்த்த அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார்.
அவரையும் முதியவர் கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
இதுபற்றி அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததுடன், உடலில் இருந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜோசப் சுபா என்பவரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது.