கிளிநொச்சிப் பிரதேசத்தின் முதன்மையான வளமாக காணப்படும் நெற் பயிர்ச்செய்கைக்கு பிரதான நீர் வளமாக இரணைமடுக்குளம் காணப்படுகின்றது.
பருவமழை பொய்த்துள்ளமையினால் தற்போது இரணைமடுக்குளத்தினுடைய நீர் மட்டம் குறைந்து வறண்டு போய்காணப்படுகின்றது.
கிளிநொச்சியிலுள்ள இந்த இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப்பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும். ஆனால் தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்த்துப்போயுள்ளதால் இரணைமடுக்குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது.
இவ்வருடம் இரணைமடுக்குளத்தில் போதுமானளவு நீர் தேக்கி வைக்கப்படாமல் போனால் 2014ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பிரதேச பொருளாதாரத்துக்கு முக்கிய தூணாக விளங்கும் இந்த குளத்தினை விஸ்தரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இதன்மூலம் கைவிடப்பட்டுள்ள பல்லாயிரம் ஏக்கர் வயல் நிலங்களில் நெல் பயிரிட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள குளத்தின் விஸ்தீரணத்தில் உள்ள கொள்ளளவு நீரைக்கொண்டு சிறுபோகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டளவு நீரையே ஒவ்வொரு வருடமும் விவசாயிகளால் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சிப் பிரதேசத்தில் உள்ள 100 வீதமான வயல் நிலங்களையும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்த வேண்டுமானால் அப்பிரதேசங்களில் உள்ள குளங்களை விரிவு படுத்துவதுடன் நீர்பாசன முறைமையையும் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவை உள்ளது.