விஜய், காஜல் அகர்வால், மோகன் லால் நடிக்கும் புதிய படம் ‘ஜில்லா‘. ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். நேசன் இயக்குகிறார். இப்படம் பொங்கலையொட்டி நாளை (ஜனவரி 10ம் தேதி)ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் விஜய்யின் ஜில்லா படத்துக்கு தடைகேட்டு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜில்லா என்ற பெயரில் ஏற்கெனவே படமெடுத்த தயாரிப்பாளர் தாம்பரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே தனது வழக்கறிஞரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த மகேந்திரன் மீது 4பேர் கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளது. முகத்தில் காயத்துடன் வடபழனி சூர்யா மருத்துவமனையில் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய்யின் முந்தைய படமான ‘தலைவா’ வெளியாவதில் பெரும் பிரச்னையை சந்தித்ததால், இந்த ‘ஜில்லா’ வில் அரசியல் வசனங்கள் ஏதுமில்லாமலும், அப்படம் குறித்து பெரிதாக புரமோ இல்லாமலும் அடக்கியே வாசிக்கப்பட்டது. மேலும் படத்தின் ஆடியோ கூட எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சாதாரணமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஜில்லா படத்திற்கு புதிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளதால் நாளை படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.