தோடர்ச்சியாக 30 மணிநேரங்கள் கம்பியூட்டரில் வேலை செய்த இந்தோனேஷிய இளம்பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். மிடா டுரன் என்ற 24 வயது இளம் பெண், இந்தோனேஷியாவில் உள்ள ஒரு விளம்பர நிறுவனமான யங் அன்ட் ருபிகேம் என்ற நிறுவனத்தின் காப்பிரைட்டராக பணிபுரிந்து வந்தார். மூன்று ஷிப்டுகள் தொடர்ச்சியாக அந்த அலுவலகத்தில் பணிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இந்த அலுவலகத்தில் மிடா டுரன் தொடர்ச்சியாக 30 மணி நேரங்கள் வேலை செய்வதாகவும், தன்னை தன்னுடைய மேலதிகாரி கொடுத்த வேலையை முடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கட்டளையிட்டதால் தான் இவ்வாறு வேலை செய்வதாக இறப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பணிகளுக்கிடையே இவர் சரியாக உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. குளிர்பானங்களை மட்டுமே அருந்தியுள்ளார். தனக்கு சாப்பிட யாராவது உணவு கொண்டு வாருங்கள் என்று இவர் கேட்டுக்கொண்ட போதும் இவருக்கு யாரும் உணவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. உணவு இன்றி ஓய்வும் இன்றி தொடர்ச்சியாக பணிபுரிந்த இவர் மறுநாள் தனது கேபினில் மரணம் அடைந்திருப்பதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தோனேஷிய போலீஸார் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தெரியும் என்றும் அந்த அறிக்கைக்கு பின்னர் அவர் பணிபுரிந்த அலுவலக நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.