கொரோனா எனப்படும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ நெருங்கியிருக்கும் வேளையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. வூகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 ஆயிரத்து 600 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு வெளியே, மூன்றாவது மரணமாக ஜப்பானில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், உயிரிழந்தார்.
இதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒருமாதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இணையதளம் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பணி ஓய்வு பெற்ற செவிலியர்களை சீன அரசு பணிக்கு வரும்படி அழைத்துள்ளது. சில வாரங்கள் முன்புவரை இறைச்சிக் கூடங்களில் அலைமோதிய சீனர்கள், தற்போது காய்கறிக் கடைகளை தேடி அலைந்து வருகின்றனர்.