பொதுஜனபெரமுனவில் போட்டியிடும் எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் அடுத்த ஒரேயொரு தெரிவு இரா.சம்பந்தனே என சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் மக்களுக்கான சேவையை தொடர்வதற்கான அங்கீகாரத்தினை கோரிநிற்கின்றேன்.
சிலவேளைகளில் எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாதிருப்பீர்களானால் உங்களது அடுத்த தெரிவாக சிரேஷ்ட அரசியல்வாதியான சம்பந்தனாகவே இருக்க வேண்டும்.
அவர் எனது தந்தை புஞ்சிநிலமேயின் நெருங்கிய நண்பர். அவர்கள் இருவரும் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இந்த மாவட்டத்திலிருந்து ஒன்றாக நாடாளுமன்றத்திற்கு சென்றவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் நீண்ட மக்கள் சேவையும், அரசியல் அனுபவமும் இன்றியமையாதவொன்றாக உள்ளது.
சம்பந்தனும், எனது தந்தையாரும், இன,மத, மொழி பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து மக்கள் சேவைகள் பலவற்றை முன்னெடுத்தள்ளார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.