எதிர் வரும் 20 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொள்வதற்கான எழுத்துமூல அறிவித்தல் எதுவும் இது வரை சிறைச்சாலை ஆணையாளர் தரப்பிலிருந்து அனுப்பப்படவில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்து உள்ளார்.
இதனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிள்ளையான் நாடாளுமன்ற அமர்வுக்கு செல்வதற்கான அனுமதியை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாடாளுமன்றத்துக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்க வேண்டும் ஆனால் இதுவரை அவ்வாறான அனுமதிகள் ஏதும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
பிள்ளையான் வெளியே வந்து செயற்படுவது அவர்கள் கட்சியில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என்பதனால் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜெயசேகரவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கும் இது வரை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.