பட்டங்கள் விடுவது போல
அந்தப் பெண்களின் கை நூலால்
பறவைகளை வானத்தில்
பறக்கவிட்டபடி இருந்தார்கள்.
இழுப்புக்கும் விடுதலுக்குமாக
ஏறுவதும் இறங்குவதும் ஆயின பறவைகள்.
மாவும் புளியும் அடர்ந்த சாலை,
‘கல்லா? மண்ணா?’ விளையாடும் குழந்தைகள்,
தாயின் பின்கால்களுக்கு இடையில் புகுந்து
பத்திரப் படுத்திக்கொள்ளும் யானைக்குட்டி
எல்லாம் இருந்த வானத்தின் மேல்
எவ்வி எவ்விப் பறவைகள் பறந்தன.
அப்புறம் இந்தப் பெண்கள் என்னவாயினர்?
அந்தப் பறவைகள் என்னவாயின?
இதற்கு மேல் அப்படி எல்லாம்
விடைகளை எதிர்பார்க்க முடியாது
ஒரு வினோதக் கனவிடம்.
வண்ணதாசன்