இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசாங்கமும், புதிய ஆட்சியாளர்களும் பதிவியேற்றதன் பின்னர் கிழக்கில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை மக்களுக்கான குறைகேள் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடிம்பிமலை பிரதேசத்திற்கு முதற்கட்டமாக எமது குறைகேள் செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக பேரவையினர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
பேரவையினர் குடிம்பிமலை பகுதியில் வாழும் வறுமைக்குட்பட்ட எமது மக்களை ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சந்தித்து அவர்களது நீண்டகால, குறுகியகால வாழ்வாதார நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்ததோடு
இக் கிராமத்தின் மோசமான வீதிகள், தண்ணீர் பிரச்சனை, யானைகள் அத்து மீறி ஊருக்குள் வரும் பிரச்சனைகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்,
புணர்நிர்மாணம் அற்று பழைமையாக இருக்கும் கோவில்களை மீண்டும் புணரமைப்பது தொடர்பாகவும் ஆலய நிர்வாகிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்டும், இக் கிராமத்தில் சிறுவர்களுக்கான பாலர்பாடசாலை நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதாலும் இவற்றை மீளவும் இயங்கவைத்தல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் இக் கிராமத்தின் மகளீர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி பல ஆரோக்கியமான நல்ல முடிவுகளை எட்டியிருந்தோம் என்பதோடு அடுத்துவரும் நாட்களில் இப் பகுதி மக்களுக்கு தேவையான முதற்கட்ட உதவிகளையும் செய்வதற்கு பேரவையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
பேரவையினரது இந்த மக்கள் குறைகேள் செயற்பாட்டுப் பயணம் கிழக்கின் அத்தனை எல்லைக் கிராமங்களுக்கும் சென்றடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை