நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பதிவாகும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 92 ஆயிரத்து 755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 1,149 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 இலட்சத்து 619 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் இந்த தொற்று காரணமாக இதுவரையில் 86,774 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10 இலட்சத்து 10 ஆயிரத்து 802 பேர் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் 8,944 பரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், இந்த வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் இதுவரை 6.36 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 இலட்சம் பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் மருத்துவமனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.