தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ் ஆய்வுலகில் பண்பாட்டு ஆய்வுகளில் தனது ஆய்வுத்திறந்தால் புதிய பார்வைகளைத் திறந்தவர். ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் ஆய்வுலகில் தொ.ப என்று அழைக்கப்படும் ஆய்வாளர் தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், இதுவே சனநாயகம், சமயங்களின் அரசியல், இந்து தேசியம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.அழகர்கோவில் குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருடைய அறியப்படாத தமிழகம் புத்தகம் பல்வேறு சிறப்புகளை பெற்றது.
பண்பாட்டு அசைவுகள் சமயங்களின் அரசியல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். குல தெய்வ வழிபாடு குறித்து அவர் எழுதிய புத்தகம் சிறப்பு வாய்ந்தது. 75 வயதான தொ.பரமசிவம், இன்று உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினரும், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.