ரஜினி, தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள ’கோச்சடையான்’ படம் வரும் மே 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படம் தெலுங்கில் ‘விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதையொட்டி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாதில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் சௌந்தர்யா, தாசரி நாராயணராவ், ராமநாயுடு, நடிகர் மோகன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துக்கொண்டு பேசிய ரஜினிகாந்த், எனக்கு சினிமா பற்றிய டெக்னாலஜி எதுவும் தெரியாது. சினிமா எப்படி எடுப்பார்கள் என்றுகூட தெரியாது. இருந்தாலும் டெக்னாலஜிகளுடன் கூடிய படத்தில் நடித்துள்ளேன்.
கடந்த 2½ வருடமாக கஷ்டப்பட்டு சவுந்தர்யா இந்தப் படத்தை எடுத்து உள்ளார். இந்தப் படத்தை சமீபத்தில் 3-டியில் பார்த்தேன். 10 நிமிடம் பார்த்தபோது பெரும் ஏமாற்றம் அடைந்தேன்.
உயிரோடு இல்லாதவர்களை வைத்துதான் அனிமேஷன் படம் எடுப்பார்கள். ஆனால் நான் உயிருடன் இருக்கும்போதே என்னை வைத்து அனிமேஷன் முறையில் படம் எடுத்ததை பார்க்கும்போது எனக்கே ஒருமாதிரியாக இருந்தது. ஆனால் 10 நிமிடத்துக்கு பிறகு கதையின் போக்கு என்னை அதில் ஒன்றிப்போகச் செய்து விட்டது.
அனிமேஷன் என்று தெரியாமல் கதாபாத்திரத்துடன் ஒன்றி படத்தை ரசித்தேன். ஆனால் ‘கோச்சடையான்’ கமல் ஹாசன் நடிக்க வேண்டிய படம். கமல் என்னைவிட சிறந்த நடிகர். சினிமா டெக்னாலஜி பற்றி நன்கு தெரிந்தவர்.
டெக்னாலஜி தெரியாத நான் நடித்தது கடவுள் தந்த பரிசாக கருதுகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
இயக்குனர் ராஜமௌலி பேசிய போது, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை எடுப்பது மிகவும் கஷ்டம். நான் இயக்கிய ‘நான் ஈ’ திரைப்படம், இதில் நூறில் ஒரு பாகம் என கூறினார்.