பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. தெலுங்கு பட உலகிலும் பிரபல கதாநாயகியாக இருக்கிறார். நான் ஈ, அஞ்சான், தெறி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், 24 உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இருவரும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகிறார்கள். நாகசைதன்யா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனின் மகன் ஆவார். மறைந்த பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் பேரன்.
சமந்தா–நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் (ஜனவரி) 29–ந் தேதி ஐதராபாத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உறவினர்கள், நெருங்கிய குடும்ப நண்பர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கும் ஸ்ரேயா பூபல் என்ற பெண்ணுக்கும் வருகிற ஏப்ரல் மாதம் இத்தாலியில் திருமணம் நடக்கிறது. அவர்கள் திருமணம் முடிந்த ஓரிரு மாதத்தில் சமந்தா–நாகசைதன்யா திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இவர்கள் திருமணத்தையும் வெளிநாட்டிலேயே நடத்த இருப்பதாகவும் திருமண வரவேற்பை சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா கூறியிருக்கிறார்.