சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சமயத்தில் அவருடன் வடிவேல் பாலாஜியும் நகைச்சுவை செய்து அசத்தியிருப்பார்.
மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்பதாக அவரது குடும்பத்தாரிடம் நடிகர் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.
நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த இருவாரங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்.
மீண்டும் மயக்கம் ஏற்பட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வடிவேல் பாலாஜின் மரண செய்தி திரைவட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடன் டிவி நிகழ்ச்சியில் பணியாற்றிய சகாக்கள், நடிகர் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்பதாக அவரது குடும்பத்தாரிடம் உறுதியளித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் இதை வெளியில் சொல்லவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் இச்செயலை பாராட்டி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சமயத்தில் அவருடன் வடிவேல் பாலாஜியும் நகைச்சுவை செய்து அசத்தியிருப்பார். அந்நிகழ்ச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.