Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கீதா கோவிந்தம் | விமர்சனம்

கீதா கோவிந்தம் | விமர்சனம்

2 minutes read

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, நித்தியா மேனன், அனு இமானுவேல் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் எஸ்.மணிகண்டனின் ஒளிப்பதிவில், கோபி சந்தரின் இசையில் பரசுராம் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ‘கீதா கோவிந்தம்’.

ஒரு தெலுங்குப்படம் தமிழில் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? என்பதற்கு இரண்டு காரணங்கள். அதில் ஒன்று நாயகன் விஜய் தேவரகொண்டா, மற்றையது ‘இன்கெம் இன்கெம்…’ பாடல்.

விஜய் தேவரகொண்டா தெலுங்கில் நடித்த முதல் படமான ‘அர்ஜூன் ரெட்டி’யிலேயே தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து கொண்டார். அதன் பின்னர் அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே இருமொழிப்படங்களாக ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகத் தொடங்கியது. தெலுங்கில் உள்ளதைப் போலவே தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இளம் பெண்கள் பலர் அவரது விசிறிகளாக இருப்பது கண்கூடு.

தமிழ், தெலுங்கில் முன்னணிப் பாடகராக மிளிர்ந்து கொண்டிருக்கும் சித் ஸ்ரீராமின் குரலில் வெளிவந்த ‘இன்கெம் இன்கெம்..’ பாடல் ஏற்கனவே தெலுங்கு பதிப்பிலேயே தமிழ் ரசிகர்களின் இதயத்தில் பசை போல ஒட்டிக்கொண்டது. இந்த ஒரு பாடலே தமிழில் ‘கீதா கோவிந்தம்’ படத்தை பலருக்கும் பார்ப்பதற்கான ஆவலைத் தூண்டியது.

அண்மையில், இந்திய தனியார் தொலைக்காட்சியில் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு ஒளிபரப்பப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளில் முடங்கிக் கிடந்த பலர் இந்தப்படத்தை பார்த்ததால், அது மீண்டும் அண்மைக்காலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

படத்தின் கதையைச் சுருக்கமாக பார்ப்போமேயானால், தனது வருங்கால மனைவி பற்றிய கனவுகளை கோட்டையாக கட்டி வைத்திருக்கும் ஒருவன், அவ்வாறான ஒரு பெண்ணைச் சந்தித்து காதல் கொள்கின்றான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை, நாயகனை நாயகியிடம் தவறாக சித்தரித்து விட்டது. இதனால், நாயகி – நாயகிக்கு இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் நாயகி, நாயகனின் நல்லுள்ளம் பற்றி அறிந்து கொண்டு அவன் மேல் காதல் கொள்கிறார். ஆனால், தன் மேலான காதல் நாயகிக்கு இயற்கையாக வரவில்லை என்பதனைக் காரணமாகக் கொண்டு நாயகன் நாயகியின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே மீதிக்கதை.

வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், திரைக்கதையால் சுவாரசியப்படித்தியிருக்கின்றார் இயக்குனர் பரசுராம். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா காதலாக இருந்தால் என்ன? மோதலாக இருந்தால் என்ன? இரண்டுமே ரசிக்கும் படி உள்ளது. திரையில் அந்த ஜோடியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற ‘கெமிஸ்ரி’ இருவருக்கும் பொருந்திப் போகின்றது. தனது மிகபாவங்களால் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகின்றார் ராஷ்மிகா. ‘சாக்லெட் போய்’ ஆக தனது துருதுரு நடிப்பால் பெண்கள் மனதில் சிம்மாசனம் இட்டுவிடுகிறார் விஜய் தேவரகொண்டா.

நகைச்சுவைக்கு நண்பர்கள், அடிதடிக்கு மாமன் என குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய மசாலா படமாக காதலை சற்று அதிகம் தூவி விருந்தளித்திருக்கின்றார் இயக்குனர்.

கீதா கோவிந்தம் – இளையவர்களின் காதல் கொண்டாட்டம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More