Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

4 minutes read

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.

Eelamplay is a subscription-based streaming platform and a film production company.

Link to brochure: 

https://eelamplay.com/brochure.pdf

குறிக்கோள்:
ஈழ நிகழ்வுகளில் நாட்டம் கொள்ளவேண்டிய உலகளாவிய பார்வையாளர்களுக்குரிய திரைத் தயாரிப்புகளை ஓரிடப்படுத்தி, அவற்றை வகைப்படுத்தி, தரமாகவும் இலகுவாகவும் அவர்களுக்குக் கிட்டும் வகை செய்யும் அதேவேளை, உறுப்புக்கட்டணத்தில் கிடைக்கும் வருவாயைக்கொண்டு விடுதலையை நோக்கி ஈழத்தமிழ்த் தேசத்தை நகர்த்தும் நோக்கில் ஈழத்துக்கதைகளை உலகத்தரத்தில் சென்றடைய வேண்டிய பார்வையாளர்கள் வியந்து நுகரும் வண்ணம் தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும் இயங்கச் செய்து தரமான படைப்புகளை வெளிக்கொணரல்.

தொலைநோக்கு:
அடக்குமுறைக்கு உள்ளாகி விடுதலைக்காகப் போராடத் துணிகின்ற ஒரு தேசமோ அல்லது மக்களோ, உலக ஒழுங்கில் தமக்கென்று ஒரு நாடோ, சர்வதேச ஆதரவுத் தளமோ, ஊடக பலமோ இல்லாதுவிடினும் தனித்துவமான திரைத்துறை ஒன்றை உருவாக்கித் தமது விடுதலைப் பயணத்திற்கான கருத்தியலை வெற்றிகரமாக உருவாக்க முடியும் என்ற மன உறுதியைச் சமூகம் சார்ந்த கலைஞர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஏற்படுத்தவல்ல, உலகளாவிய ஒரு முன்னுதாரணமாகத் திகழ்தல்.

பெறுமானங்கள்:
எமது அரசியல், சமூக விடுதலைக்கான தெளிவுநிலையும் கடப்பாடும் பற்றுறுதியும் எமது தேடலால் விரிவாக்கப்படுகின்ற பண்பாட்டு விழிப்புணர்வு, நுண்ணறிவு, புத்தாக்கத்திறன் ஆகியவற்றால் பலம்பெறுகின்றன.

அறிமுகம்:
ஈழத்தமிழர்பற்றி இதுவரை வெளியாகியுள்ள குறும்படங்களும் முழு நீளத் திரைப்படங்களுமாக ஏறத்தாழ ஐம்பது திரை மற்றும் ஆவணப் படைப்புகளை உலகளாவிய பார்வையாளர்கள் ஓரிடத்தில், இலகுவாகவும் தரமாகவும் பார்க்கக் கூடியதாக ஒருங்கமைத்து ஈழக்காண்பி (Eelamplay) தனது OTT முறையிலான திரையோடைத் தளத்தில் வழங்க உள்ளது.

ஈழத் திரைத் தயாரிப்புகளுக்கு அப்பால் உறுப்புரிமைப் பார்வையாளர்களுள் வெவ்வேறு வயதினருக்குத் தேவையான பொதுத் தமிழ்ப் படைப்புகளும் அவர்களின் நுகர்வுத் தேவை கருதி இங்கு உள்ளடக்கப்படும்.

கணினிக்கான இணைய உலாவிகளிலும் (Web browsers), தொலைக்காட்சி மற்றும் திறன்பேசிக்கான இரண்டு விதமான இயங்கு தளங்களுக்கான (iOS, Android) செயலிகளாகவும் (Apps) தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிப் பயன்பாட்டுக்கு உரிய வகையிலான மென்பொருட் தீர்வாக 2022 ஜனவரி 14 ஆம் நாள் ஈழக்காண்பி வெளியாகவுள்ளது.

இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு அடுத்த தலைமுறைப் புலம்பெயர் இளந்தலைமுறையினரின் புரிதலை மேம்படுத்துவதற்காக அவர்கள் சிந்திக்கும் மொழிகளிலும் துணைத் தலைப்புகள் வழங்க ஈழக்காண்பி ஒழுங்குகளை மேற்கொண்டிருக்கிறது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் இந்தப் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஈழத்தமிழர்கள் மொழி, மத மற்றும் பண்பாட்டு ரீதியாக என்றென்றும் மதிப்போடு உயர்ந்து நோக்கும் ஆரம்பகாலத் தென்னிந்தியத் திரைத் தயாரிப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஐம்பது திரைப்படங்களையும் தரமான முறையில் ஈழக்காண்பி தன்னகத்தே உள்ளடக்கவுள்ளது.

ஈழத்தமிழர் பாரம்பரியக் கலைவடிவங்களை ஒளிப்பதிவாக்கிப் பேணுவதோடு அவற்றைப் பரந்த பார்வையாளர்களிடம் எடுத்துச்செல்வதற்கான சில முயற்சிகளையும் ஈழக்காண்பி முன்னெடுக்கும் அதேவேளை, தமிழ்ச் சிறார்களுக்கான சில சிறப்புப் பதிவுகளையும் சிறுவர் நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் மேற்கொள்ளவிருக்கிறது.

இவற்றுக்கும் அப்பால் ஈழத்தமிழர்களின் திரை ஈர்ப்பை உலகத் தரத்தில் வளம்பெறச்செய்ய உதவக்கூடியவை என்று ஈழக்காண்பி கருதுபவற்றுள் திரையோடைத் தளத்தில் உள்ளடக்கும் உரிமையைப் பெற்று வெளியிடக்கூடிய ஒரு சில பிற மொழித் திரைப்படங்களுக்குத் தமிழில் துணைத்தலைப்புகளைத் தரமான மொழி நடையிலும் உரிய அணுகுமுறையிலும் வழங்கி வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இங்கே வெளியாகும் திரைத் தயாரிப்புகள் உரிய வெளியீட்டு உரிமை பெற்றவை. தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை இங்கு சேர்த்துக்கொள்ளப்படும். இவ் ஒப்பந்தங்களின் படி தயாரிப்பாளர்களுக்கும் வருவாயில் ஒரு பகுதி சென்றடையுமாறு ஈழக்காண்பியின் வியாபாரத்திட்டம் அமைந்துள்ளது.

ஈழக்காண்பியானது, ஈழத் திரைப் படைப்புகளை நுகர்வோரின் நலன்களைப் பேணுவது போல தயாரிப்பாளர்களதும் கலைஞர்களதும் மேம்பாட்டைப் பேண வேண்டும் என்பதையும் தனது தலையாய நோக்காகக் கொண்டுள்ளது. இந்த வகையில், தயாரிப்பாளர்களுக்கான சந்தைப்படுத்தலை இலகுவாக்கி அவர்களின் தயாரிப்புகளைத் தரமாகவும் விரைவாகவும் பலரை ஒரே நேரத்திற் சென்றடையும் வண்ணம் சந்தைப்படுத்தி ஊக்குவிப்பதும் முக்கியமாகிறது. திருட்டு வழிகளில் திரைப்படங்களைப் பிரதி செய்து வெளியிடும் தவறான சந்தை ஈழத் தயாரிப்புகளைப் பாதிக்காத வகையிலும், அதேவேளை நுகர்வோருக்கு நேர்மையாகவும் ஈழக்காண்பி விளங்கும்.

இங்கு வெளியாகும் படைப்புகள் திருட்டுக்கு உள்ளாக்கப்பட்டால் அவற்றைத் தடுக்கும் தொழிநுட்ப ஆற்றலையும் சட்ட ஒழுங்குகளையும் ஈழக்காண்பி தன்னகத்தே கொண்டுள்ளது. பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதோடு புலமைச்சொத்துத் திருட்டுப் போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டே உலகத்தரம் வாய்ந்த OTT தளங்களில் (Netflix) பயன்படுத்தப்படும் தொழிநுட்ப உத்திகளுக்கு நிகரான அணுகுமுறைகளை ஈழக்காண்பியும் பயன்படுத்துகிறது.

ஈழத் திரைத் தயாரிப்பாளர்கள், தமது வருவாய் பாதிக்கப்படும் என்ற அச்சமின்றி பிரத்தியேகமான சிறப்புத் திரையிடல்களை ஈழக்காண்பியில் மேற்கொள்வதென்பது ஈழக்காண்பி திட்டமிட்டுள்ள உறுப்புரிமை நிறைவெண்ணை (critical mass) அடையும்போது சாத்தியமாகிவிடும். எனினும், ஈழக்காண்பியின் உறுப்புரிமை வீச்சுப் பலம் பெறும் வரையான காலத்தில், நிகழ்நிலைத் திரையோடித்தளத்தில் ஒரு படைப்பு வெளியாக முன்னர் மெய்நிலைத் திரைப்பட விழாக்களிலும், திரையரங்குகளிலும் பகிரங்கத் திரையிடலை மேற்கொண்ட பின்னரே இங்கு தமது படைப்புகளை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் என்பதை ஈழக்காண்பியின் ஆரம்பகாலக் கட்டண உறுப்பினர்கள் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் தாயகத்துக்கு அப்பால் உலகளாவிப் பரந்து வாழும் பார்வையாளர்களிடம் அறவிடப்படும் உறுப்புரிமைக்கட்டணமே ஈழக்காண்பியின் பராமரிப்புக்குரிய அடிப்படை வருவாய்க்கான மூலம் ஆகிறது. இதனால், 2021 ஆம் ஆண்டு முடிவுக்குள் உறுப்புரிமைக்கட்டணம் செலுத்தும் சுமார் இரண்டாயிரம் பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்பது ஈழக்காண்பியின் இலக்கு ஆகிறது. இக் காரணத்தினாலேயே ஈழக்காண்பியின் உறுப்புரிமைக்கான அடிப்படை நிறைவு எண்ணை அடையும் வரை ஒரு வருடத்துக்கான உறுப்புரிமைப் பணத்தை முற்கூட்டியே பார்வையாளர்கள் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனை கையாளப்படுகிறது. இது குறித்த புரிந்துணர்வை இலாப நோக்கற்ற ஒரு பொது நோக்கு முயற்சி என்ற வகையில் ஈழத்திரையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பார்வையாளர்களிடம் ஈழக்காண்பி எதிர்பார்க்கிறது. குறித்த உறுப்புரிமை நிறைவெண்ணை எய்தியதும் மாத உறுப்புரிமை செலுத்தித் தமது உறுப்புரிமையைத் தொடரும் வாய்ப்பை பயனாளர்களின் நலன் நோக்கி ஈழக்காண்பி நிச்சயமாக நல்கும்.

இலாப நோக்கற்ற முன்னெடுப்பு என்ற அடிப்படையில் ஈழக்காண்பியில் விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது கொள்கை சார் முடிவாக உள்ளது. எனவே, பார்வையாளர்களுக்கு இங்கே விளம்பர இடையூறுகள் இருக்காது.

ஈழக்காண்பியின் ஆரம்பத் திட்டமிடலின் போதே இம் முன்னெடுப்பைப் பலப்படுத்தத் தாமாகவே முன்வந்து தயாரிப்பாளர்கள் சிலர் தமது படைப்புகளை இலவசமாக உள்ளடக்கி ஊக்குவித்தனர். அதேவேளை, இந்தத் திட்டத்தின் நோக்கைத் தெரிவித்த போது இதிலே இணைந்துகொள்ள இதர தயாரிப்பாளர்களில் பலரும் முன்வந்தார்கள்.

உருவாக்கத் திட்டமிடல்:
2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த முயற்சி திட்டமிடப்பட்டு இதற்குரிய இணைய முகவரியாக eelamplay.com பதிவு செய்யப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதியும் தமிழர் திருநாளுமான தைப் பொங்கல் நாளன்று திரையோடைத் தளம் உறுப்புரிமைப் பார்வையாளர்களுக்குத் திறந்து விடப்படும் பொழுது இதுவே ஈழத்தமிழர்களுக்கான முதலாவது தனித்துவமான திரையோடைத் தளமாக வெளிவருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More