இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல், சாரா அலி கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில் தனது வாகனத்தின் எண் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் ஜெய் சிங் யாதவ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரில், ’இந்தூர் பகுதியில் நடிகர் விக்கி கெளஷல் பைக்கில் செல்லும் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வாகன எண் என்னுடையது. இது படக்குழுவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இருப்பினும் எனது அனுமதி இல்லாமல் வாகன எண்ணை பயன்படுத்தியுள்ள செயல் சட்டவிரோதமானது. இதுகுறித்து விக்கி கெளஷல் மற்றும் படக்குழுவினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார். மேலும் அவர் தன்னுடைய வாகனத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட இந்தூர் காவல்துறை, இந்த விவாகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.