தமிழ் திரையிசை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடல் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் நட்சத்திர இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த பிரம்மாண்டமான படைப்பிற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி, கோடி கணக்கிலான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘சோழா சோழா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் ஓகஸ்ட் 19ஆம் திகதியன்று மாலை 6:00 மணியளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியரும், கவிஞருமான இளங்கோ கிருஷ்ணன் எழுத, பின்னணி பாடகர்கள் சத்யபிரகாஷ், வி எம் மகாலிங்கம், நகுல் அபயங்கர் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஒஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் மாயாஜால இசையில் வெளியாகும் ‘சோழா சோழா..’ பாடல்களை கேட்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே ‘சோழா சோழா..’ எனத் தொடங்கும் பாடலில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் தொடர்புடைய பாடல் என்பதால், சீயான் விக்ரமின் ரசிகர்கள் இப்பாடலை இணையத்தில் வைரலாக்க ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.