நடிகர்கள் ஆர். எஸ். கார்த்திக் மற்றும் லிங்கா கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘பரோல்’ படத்தின் முன்னோட்டத்தை ‘மக்கள் செல்வன்’ விஜயசேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் படைப்பு ‘பரோல்’. இதில் நடிகர்கள் ஆர். எஸ். கார்த்திக், லிங்கா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகைகள் கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், நடிகர்கள் மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் எக்சன் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை TRIPR என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மதுசூதனன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
” ஒவ்வொரு குடும்பத்திற்கு பின்னால் சொல்லப்படாத… சொல்ல முடியாத… கதை ஒன்று இருக்கும். தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை, பரோலில் எடுக்கிறான் தம்பி.
சகோதரர்களுக்கிடையே உள்ள பிரச்சனையும், அதற்கான சம்பவங்களும் தான் படத்தின் பரபர திரைக்கதை. இந்தப் படத்தின் திரைக்கதை பிடித்ததால் ‘மக்கள் செல்வன்’ விஜயசேதுபதி முழு திரைப்படத்திற்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.” என்றார்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் எக்சன் காட்சிகள் இருந்தாலும், விஜய சேதுபதியின் வசீகரிக்கும் பின்னணி குரலுடன் வெளியாகி இருப்பதால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
இப்படத்தின் முன்னோட்டத்திற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.