‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ எனும் படத்தின் இயக்குநர் தம்பி சையத் இப்ராஹிம், தனது பெயரை ‘ஸ்ரீ’ என மாற்றிக்கொண்டு, ‘ரிலாக்ஸ்’ எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் பா. ஆனந்த் குமார் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ரிலாக்ஸ்’.
இதில் மறைந்த திரையுலக ஆளுமை கவிஞர் வாலி மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி, ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ எனும் படத்தை இயக்கியவர் இயக்குநர் தம்பி சையத் இப்ராஹிம்.
விஜய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு, டேவி சுரேஷ் இசையமைக்கிறார்.
காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ”இந்த கதையில் வரும் நாயகன், தன் வாழ்க்கையில் காமத்துக்கும் காதலுக்கும் இடமில்லை என தீர்மானித்து வாழ்கிறான். ஆனால், அவனை மூன்று பெண்கள் காதலிக்கிறார்கள்.
இதனிடையே அவனது பெற்றோர், ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.
இந்த சூழலில் நாயகன் பதற்றமே இல்லாமல் நிதானமாக என்ன முடிவெடுக்கிறான் என்பதை ஜனரஞ்சகமாகவும் நகைச்சுவையாகவும் சொல்கிற படம் தான் ‘ரிலாக்ஸ்’.
வயநாடு, காசர்கோடு, மூணாறு ஆகிய இடங்களில் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
படத்துக்கான நடிகர், நடிகைகளின் தெரிவு நடைபெற்று வருகிறது. உறுதியான அதிகாரபூர்வமான பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
இயக்குநராக இருந்து கதாநாயகனாக அறிமுகமாகும் ஸ்ரீயை, பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆர். சுந்தர்ராஜன், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர்.