டிஜிட்டல் திரை பிரபலம் மதன் கௌரி கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்திற்கு, ‘தேடி தேடி பாத்தேன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
‘ஒரு கல்லூரியின் கதை’, ‘மாத்தி யோசி’, ‘அழகன் அழகி’, ‘வண்ண ஜிகினா’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் ‘தேடி தேடி பாத்தேன்’.
இதில் பிரபல யூட்யூப் நட்சத்திரம் மதன் கௌரி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ‘சாமானியன்’ படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ரித்தா ராவ் நடித்திருக்கிறார்.
கே. ஆர். சக்திவேல் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்திருக்கிறார். யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான வி. மதியழகன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் லுக்கில் சிறார்கள் இருவர் பரந்த புல்வெளியில் ஓடியாடி விளையாடிக்கொண்டே… எதையோ ஒன்றை தேடுவது போல் வடிவமைக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் ‘தேடி தேடி பார்த்தேன்’ என்றில்லாமல், ‘தேடி தேடி பாத்தேன்’ என பேச்சு வழக்கிலான சொல்லை தலைப்பாக வைத்திருப்பதை.., ‘மெல்ல தமிழ் இனி சாகும்’ எனும் பெயரில் தமிழை வளர்ப்போர் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.