‘நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் ‘வுல்ஃப்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வுல்ஃப்’. இதில் பிரபுதேவா கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் நடிகை ராய் லட்சுமி, அனுசுயா பரத்வாஜ், அஞ்சு குரியன், வசிஷ்ட சிம்ஹா, ஆர். ஜே. ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.
திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சந்தேஷ் நாகராஜ் தயாரித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவரும் ஓநாயின் குணாதிசியங்களை கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு இடையே நடைபெறும் மோதலில் யார் வெற்றி பெறுகிறார்? என்பதுதான் படத்தின் கதை. புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் ” என்றார்.