‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ்- ‘கலை உலக இளம் பெரியார்’ சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜாக்சன் துரை’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பி. வி. தரணிதரன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டின் வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’. இவர் தற்போது ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார். இதில் சிபிராஜ்- சத்யராஜ் மீண்டும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனமும், ஐ ட்ரீம் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இதனிடையே ‘ஜாக்சன் துரை’ படத்தின் முதல் பாகத்தில் இணைந்து நடித்த சத்யராஜ்- சிபிராஜ், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இது அரிய சாதனை என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.