மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இன்று (24) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “ஜெயலலிதா கருணை உள்ளம் கொண்டவர்” என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், “மதிப்பிற்குரிய அமரர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளில், அவர் தற்போது நம்ம கூட இல்லையே என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
“ஜெயலலிதா போல் இன்னுமொரு பெண்மணியை பார்க்க முடியாது. அவர் அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல் மற்றும் ஆளுமை கொண்ட பெண்மணி.
“நடிகராக இருந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து முதலமைச்சரானவர் எம்ஜிஆர். அவரது மறைவுக்கு பிறகு அந்த கட்சி பிளவுபட்டது. அப்போது, பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கியவர் திறமையான தனிப் பெண்மணி ஜெயலலிதா.
“இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவின் திறமையை பார்த்து வியந்தார்கள். ஒருகாலத்தில் எனக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டு, அவருக்கு எதிராக நான் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
“அவற்றை எல்லாம் மறந்து என்னுடைய மகள் திருமண விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம் கொண்டவர் ஜெயலலிதா” என, நடிகர் ரஜினி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது’ என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த், தற்போது, இவ்வாறான வீடியோவை வெளியிட்டுள்ளமை தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.