கனடா நாட்டு குடியுரிமையை தான் துறக்க உள்ளதாக பிரபல ஹிந்தி நடிகர் அக்சய் குமார் தெரிவித்துள்ளார்.
‛‛இந்தியா தான் எனக்கு எல்லாமே. நான், கனடா நாட்டு கடவுச்சீட்டை துறக்க முடிவு செய்து விண்ணப்பம் செய்துள்ளேன்” என அக்சய் குமார் கூறியுள்ளார்.
கனடாவின் குடியரிமை பெற்றுள்ளதால் 2019ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலில் அக்சய் குமார் வாக்களிக்கவில்லை எனத் தகவல்கள் பரவியது. இதனையடுத்து, பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, அக்சய் குமார் தனது கனடா குடியுரிமையை துறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது பற்றி அக்சய் குமாரே உறுதிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ‛‛இந்தியா தான் எனக்கு எல்லாமாக இருக்கிறது. இந்தியா மீதான அன்பை நிரூபிக்கும் வகையில், கனடா குடியுரிமை நான் துறக்க உள்ளேன். கனடா நாட்டு குடியுரிமையை துறக்க விண்ணப்பம் செய்துள்ளேன்” என்றார்.
அத்துடன், “1990ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் எனது 15க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியடைந்தன. இதனால் நான் மனமுடைந்து போனேன். அப்போது கனடாவில் இருந்த என் நண்பர் என்னை அங்கு அழைத்தார். வேலை நிமித்தமாக அங்கு சென்றேனர். அப்போதே குடியுரிமையை பெற்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த வேளையில், ரிலீசுக்கு காத்திருந்த படங்கள் இரண்டும் சூப்பர் ஹிட் அடித்தன. நான் இந்தியா திரும்பியதும், என்னிடம் கனடா கடவுச்சீட்டு இருப்பதையே மறந்துவிட்டேன். இதனால் அதனை மாற்ற வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.