இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகிவரும் ‘கள்வன்’ எனும் திரைப்படத்திலிருந்து ‘அடி கட்டழகு கருவாச்சி..’ எனத் தொடங்கும் முதல் பாடல் அதன் லிரிக்கல் வீடியோவோடு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் பி.வி. சங்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘கள்வன்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான ஞான சம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் இயக்குநரான பி.வி. சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு, படத்தின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான யதார்த்த வாழ்வினை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்தை எக்ஸஸ் ஃபிலிம் ஃபெக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் ஜி. டில்லிபாபு தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘அடி கட்டழகு கருவாச்சி.. உம்மேல காதல் வந்து உருவாச்சி..’ என தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை பாடலாசிரியர்களான மாயா மகாலிங்கம் மற்றும் ஏகாதசி ஆகியோர் எழுதியுள்ளனர். இசையமைப்பாளரான ஜீ.வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் மெல்லிசையாகவும், காதலை மையப்படுத்தியும் உருவாகியிருப்பதால் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.