தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி, நட்சத்திர அந்தஸ்தை தொடுவதற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் பிரஜின் நடிப்பில் தயாரான ‘D 3’ எனும் திரைப்படம் எதிர்வரும் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘D3’. இதில் பிரஜின் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் திவ்யா பிரதீப், காயத்ரி யுவராஜ், வர்கீஸ் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. கே. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. மனோஜ் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “மூன்று பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் முதலில் வெளியாகிறது.
இதற்குப் பிறகு இதன் முந்தைய இரண்டு பாகங்கள் வெளியாகும். குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் தங்களையும் அறியாமல் ஏதேனும் ஒரு தடயத்தை விட்டுச் செல்வார்கள்.
இது பிரபஞ்சத்தின் மரபு. இந்த திரைப்படத்தில் குற்றவாளி, குற்ற செயலில் ஈடுபட்ட இடத்தில் ஒரு வார்த்தையை விட்டுச் செல்கிறார். அந்த வார்த்தைக்கான பொருளையும், அதன் பின்னணியையும் தெரிந்து கொள்வதற்காக காவல்துறை துல்லியமாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிகிறது. நடிகர் பிரஜின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். இந்தப் படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும்” என்றார்.