நட்சத்திர வாரிசாக இருந்தாலும் தனக்கான தனித்துவமான அடையாளத்தை உண்டாக்குவதற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளதோடு, அதனை பன்முக ஆளுமைத் திறன் மிக்க நட்சத்திர நடிகர் சிலம்பரசன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு படத்தினை சிறப்பித்திருக்கிறார்.
‘மத யானை கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
இதில் சாந்தனு பாக்யராஜுடன் கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, நந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியிலான வாழ்வியலை மையப்படுத்தியுள்ள இந்த படத்தை திட்டக்குடி கண்ணன் ரவி குழுமம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் முன்னோட்டத்தில் கிராமிய பின்னணியில் அங்கு வாழும் மக்களின் யதார்த்த வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பட முன்னோட்டம் ஒப்பாரிப் பாடலுடன் ஆரம்பமாகி, ‘சாவு எங்கள குறி பாத்திருக்குறது தெரியாம நாங்க பாட்டுக்கு சந்தோசமா கபடி விளையாடிக்கிட்டு இருந்தோம்’ என்ற வசனம் ஏதோ ஒரு சோக கதையை விபரிப்பது போல் வருகிறது.
அதன் பின்னர் சில காதல் காட்சிகள்… அதை தொடர்ந்து ‘இரண்டு சாதிக்கு நடந்த கலவரம்’ என்ற வசனம் சாதிய பிரச்சினையை பற்றிய பேசுவதாக உணர்த்துகிறது.
கபடியாட்டம், துப்பாக்கிச் சத்தங்கள், சண்டை, வெட்டு குத்து, ரத்தம் என நீளும் காட்சிகளால் ரசிகர்களிடையே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.