‘பாகுபலி’ பட புகழ் நடிகர் ராணா டகுபதி கதையின் நாயகனாக நடித்து வரும் ‘காடன்’ படத்திற்காக மூன்று மொழிகளில் பின்னணி பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
‘மைனா’, ‘கும்கி’ ஆகிய படங்களை இயக்கி தனி முத்திரை பதித்த இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘காடன்’.
இப்படத்தில் ‘பாகுபலி’ பட புகழ் நடிகர் ராணா டகுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகர் விஷ்ணு விஷால், சம்பத் ராம், ரோபோ சங்கர், அஸ்வின், உன்னி கிருஷ்ணன், ஷ்ரியா பலோன்கர், ஜோயா ஹுசேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசை அமைத்திருக்கிறார்.
வனமும் வனம் சார்ந்த பகுதிகளையும் கதைக்களமாக கொண்டு, யானை மற்றும் யானை வழித்தடங்களை அழித்து வணிக வளாகங்கள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் வன வளங்களை இயற்கையோடு பாதுகாக்கவேண்டும் என்ற அம்சத்தை வலியுறுத்தும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகி இருக்கிறது.
காடன் திரைப்படம் மூன்று மொழிகளிலும் அடுத்த மாதம் 26 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், மூன்று மொழிகளிலும் வன ஆர்வலராக நடித்திருக்கும் நடிகர் ராணா தனக்கான கதாப்பாத்திரத்திற்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பின்னணி குரல் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இந்தத் தகவலை தன்னுடைய இணையப் பக்கத்தில் காணொளியுடன் வெளியிட்டிருக்கும் ராணாவிற்கு அவரது ரசிகர்களும், திரையுலக ஆர்வலர்களும் கை வலிக்க லைக்குளுக்களையும், கமெண்ட்களையும் உதிர்த்து வருகிறார்கள்.