பொலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவிற்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சுப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியான ‘கோச்சடையான்’ என்ற படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பொலிவுட் நடிகை தீபிகா படுகோன்.
பொலிவுட் படங்களில் மட்டுமல்லாமல் ஹொலிவுட் படங்களில் நடித்து சர்வதேச அளவில் இரசிகர்களை பெற்றிருக்கிறார்.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையில் இவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் அவர் மருத்துவரின் அறிவுரையை ஏற்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என இரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
இதனிடையே பொலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தையும், முன்னாள் இந்திய பேட்மிட்டன் விளையாட்டு வீரருமான பிரகாஷ் படுகோனேவிற்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரண்டு மூன்று நாளில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் காத்திருக்கும் நிலையில் இவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.