Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பட்டுசேலை பற்றிய தகவல்

பட்டுசேலை பற்றிய தகவல்

3 minutes read

பட்டு துணிகள் அதை அணிபவர்களுக்கு தெய்வீக அழகை தரும் என்று புகழ்வார்கள். மங்கையர்கள் அதிகம் விரும்பி வாங்குவது பட்டு சேலை ஆகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் பட்டு நூல்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

குறிப்பாக சாதாரண பட்டு சேலையை அசல் பட்டு சேலை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. அசல் பட்டு சேலை எவ்வாறு இருக்கும்? அதை அடையாளம் காண்பது எப்படி? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

அசல் பட்டு சேலை
பொதுவாக பட்டு சேலையை திருமணம் உள்பட முக்கிய விழாக்களுக்கு அணிந்து செல்வார்கள். பட்டு சேலையில் சரிகை புரக்கோடு, கோர்வை, பட்டு செல்ப் என்ற வகைகள் உள்ளன. சரிகை புரக்கோடு வகையில் டிசைன்கள் குறைவாக இருக்கும். கோர்வையில் ஆங்காங்கே டிசைன்கள் இருக்கும். பட்டு செல்ப் வகையில் டிசைன்கள் அதிகமாக இருக்கும்.

அசல் பட்டு சேலையில் உள்ள பட்டுகள் அனைத்தும் பட்டு நூலை அவித்து செய்யப்பட்டது ஆகும். அதன் தரம் நன்றாக இருப்பதுடன், கண்ணை கவரும் வகையில் இருக்கும்.

பட்டு சேலையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரைதான் செய்ய முடியும். அதில் தங்க ஜரிகை இருக்கும். அதற்கு மேல் விலை கொண்ட சேலையில் விலை உயர்ந்த வைரக்கற்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். இதனால்தான் அந்த பட்டு சேலைகளின் விலை அதிகம்.

பட்டு சேலையை ஏழை-எளிய மக்களும் வாங்கி உடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கோரா பட்டு என்ற வகை சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பட்டு சேலையின் நூலை அவிக்காமல் அப்படியே செய்வார்கள். இதனால் இதன் விலை குறைவு. இந்த வகை சேலையும் அசல் பட்டு சேலையை போன்று மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

பட்டு சேலையின் ஆயுட்காலம்
தற்போது கைத்தறி மூலம் பட்டு சேலையை செய்ய போதிய ஆட்கள் கிடைக்காததால் விசைத்தறி மூலம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் கைத்தறி மூலம் செய்யப்படுவதுபோன்று செய்யப்படுவதால், வித்தியாசம் தெரிவது இல்லை.

அசல் பட்டு சேலையை கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டு அதை விரலால் சிறிது தடவி பார்த்தாலே அதன் தன்மை தெரிந்து விடும். மிகவும் மென்மையாக இருப்பதால் பட்டு சேலையை பற்றி தெரியாதவர்கள்கூட எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். முக்கியமாக சேலையின் ஓரத்தில் போடப்பட்டு இருக்கும் சுங்குமுடிகள் அளவாக ஒரே சீரான முறையில் இருக்கும். அதுபோன்று அசல் பட்டு சேலையை கையால் சுருட்டி மடித்தாலும் அதில் உள்ள பட்டுநூல் உடையாது.

பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது உள்ள நவீன காலத்தில் விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை குறைவு. அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.

பராமரிப்பது எப்படி?
பட்டு சேலையை மற்றதுணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்.

சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரைவொஷ் செய்து விடுகிறார்கள். அவ்வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். அவ்வாறு செய்யவே கூடாது.

ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும்.

அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும்.

சிலர் பட்டு சேலையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. நமது உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது.

குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பு, மென்மை போகாது.

நன்றி:மித்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More