தையிட்டியில் முளைத்த புத்தர்
நல்லூர்க் கந்தனிடம் போய்
அரச மரத்தின் கிளைகளில்
பேரினவாதக் குரங்குகள்
கூடிக் கூத்தடிப்பது பற்றி
புலம்பித் தீர்த்தாராம்!
விகாரை நிர்மாணிக்கக்
கொண்டுவந்த மண்ணில்
தமிழ் மணந்தது பற்றியும்,
தாகத்துக்குக் குடித்த நீரில்
குருதி படிந்திருத்தது பற்றியும்
வியந்து நொந்தாராம்!
கந்தரோடையில்
காணி வாங்கிய பிக்குவின்
காதைத்திருகி,
“நிழலுக்கு ஒதுங்கிய இடத்துக்கு
உரிமை கோராதே முட்டாள்”
என்று சொல்லப் புறப்பட
‘கொன்றுவிடுவார்கள்’
என்று எச்சரித்தாராம் கந்தன்!
புத்தனும் பாவம்!
கந்தனும் பாவம்!
சி. கிரிஷாந்த்ராஜ்