1996-97 -ஆம் ஆண்டுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது மகாகவி. ஆகச் சிறந்த படைப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முதல் வாய்ப்பும், தொடர்ந்து எழுதக் களமும் அமைத்துக் கொடுத்தது.
சற்றும் சமரசம் செய்யாத படைப்புத் தேர்வுகள், துட்டிலக்கியம், வட்டமேசை, சிற்றிதழ்கள் அறிமுகம், கவிதை கேளுங்கள், விவாதக் கட்டுரைகள் பேசுபொருளாயின. இதழின் தலையங்கமும் முக்கிய இடத்தைப் பிடித்தது.
இதழ் பரவலாக அறிமுகப்படுத்தப் பட்டதும், அதன் தொடர்ச்சியாக வந்த கடிதங்கள் “தூண்டுகோல்” பகுதியில் இடம்பெற்றதும் இதழை மேலும் விவாதக் களமாக்கியது. இதழை அடுத்தகட்ட நகர்வுக்கும் கொண்டு சென்றது.
இதழின் ஆசிரியர் குழுவினர் இதழ் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தனர். தமிழன் அச்சகம் உரிமையாளர் வதிலை தமிழன் என்ற ரவிச்சந்திரன், இதழின் பொறுப்பாசிரியராக இருந்து தற்போது அமெரிக்காவில் (கலிபோர்னியா) வசிக்கிற ஆனந்த பிரகாஷ், பின்னாளில் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய கவிஞர் சூரியதாஸ் எனப் பல மாலுமிகள் இந்தக் கப்பலை மூழ்காமல் பார்த்துக் கொண்டனர்.
தொடர்ந்து, 1997 – ஆம் ஆண்டில் வெளியான மகாகவி ஆண்டுமலரும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதை உறுதி செய்யும் விதமாக பொள்ளாச்சி நசன் மற்றும் வாரமுரசு இதழாளர் ராஜா சொர்ண சேகர் இருவரும் 1996 இல் வெளிவந்த 41 சிற்றிதழ்களில் சிறந்த சிற்றிதழாக மகாகவியைத் தேர்வு செய்து சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கியதும் மிக முக்கியமான தருணமாக அமைந்தது.
அடுத்த சிலநாட்களில் கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் 1997 – ஆம் ஆண்டுக்கான சிற்றிதழ்கள் மாநாட்டை அறிவித்தது. ஊட்டியில் நடைபெறும் இந்த மாநாட்டில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் பிரதானமாக அறிவிக்கப்பட்டன.1. புதிய நிர்வாகிகள் தேர்வு 2. சிறந்த சிற்றிதழ்களுக்குப் பரிசுகள் நாடு முழுவதும் பலரும் தங்கள் சிற்றிதழ்களை போட்டிக்கு அனுப்பினர். மகாகவியும் முனைப்புடன் போட்டியில் கலந்து கொண்டது. முடிவு என்ன என்பதை அறிய பெரும் ஆர்வத்துடன் நாட்களை நகர்த்தத் தொடங்கினோம்.
வதிலைபிரபா