அண்மையில் காலமான யாழ்ப்பாண வட்டுக்கோட்டை செமினரிக் கல்லூரியின் மேனாள் அதிபரும் இறையியல் கலாநிதியுமான வண.பிதா சொலொமன் ஆனந்தன் அவர்களது நினைவாக நன்றிப் பிரார்த்தனையும் நினைவுரையும் உடுப்பிட்டி தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயத்தில் நாளை (19.08.2023) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
வண.பிதா சொலொமன் ஆனந்தன் அவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியின் நீண்டகால ஆசிரியராகவும் அதிபராகவும் இறையியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற கல்வியியலாளராகவும் சிறந்த நிர்வாகியாகவும் நல்ல மனிதநேயப் பண்பாளராகவும் சமூகசேவையாளராகவும், பிற மதத்தவர்களுடன் நல்லுறவை வளர்க்கப் பாடுபட்டவராகவும் விளங்கினார். புகழ் பூத்த உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவரான அவர் அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவரது இறைப் பணி வாழ்வின் நிறைவுக்கு நன்றி செலுத்துமுகமாகவே இந்தப் பிரார்த்தனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயத்தின் பங்குத்தந்தை வண.பிதா எஸ். துரைரட்ணம் அடிகளார் தலைமையில் நிகழும் இந்த வழிபாட்டில் உடுப்பிட்டிப் பங்குச் சபையினரும் உறவினரும் ஊரவர்களும் பங்கேற்கின்றனர். தேவாலயத்தில் நிகழும் இந்த வழிபாட்டில் பேராதனைப் பல்கலைக்கழத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கைக் கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளருமான கலாநிதி செ. சுதர்சன் அவர்கள் வண.பிதா சொலமன் ஆனந்தன் தொடர்பான நினைவுரையை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்வை மறைந்த வண.பிதா சொலொமன் ஆனந்தன் அவர்களது மருமகள் சப்திகா ஜபார் ஒழுங்கமைத்துள்ளார்.