Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ: மனுஷ்யபுத்திரன் கவிதை

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ: மனுஷ்யபுத்திரன் கவிதை

1 minutes read

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ
அவர்கள்தான் எப்போதும் வெல்கிறார்கள்
அவருக்குப் பதில் வேறொருவர் வென்றிருந்தால்
நீதி கிட்டியிருக்குமா என்று கேட்காதீர்கள்
இது ஒரு எளிய சமாதானம்
அதுகூட கிட்டவில்லை

வரலாற்றிற்கு
குற்ற உணர்வென்று ஏதுமில்லை

படுகொலைக் குருதியில் நீராடியவர்கள்
வெற்றிப் பதாகைகளுடன்
அரியாசனம் நோக்கிச் செல்கிறார்கள்
அவர்கள் கொய்த தலைகளில்
இன்னும் ரத்தப் பெருக்கு நிற்கவில்லை
அதற்குள் வந்துவிட்டன
அவர்கள் தலைகளுக்கு கிரீடங்கள்

வரலாற்றிற்கு
நாண உணர்வென்று ஏதுமில்லை

மக்கள் தீர்ப்பென்பது
மக்களின் கூட்டுப்புதைகுழிகளிலிருந்து துவங்குகிறது

மக்களின் தீர்ப்பு என்பது
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர் கைகளில் ஏந்திய புகைப்படங்களை
எள்ளி நகையாடுவதிலிருந்து துவங்குகிறது

வரலாற்றிற்கு
நீதி உணர்வென்று ஏதுமில்லை

இவர்கள்மேல்தான்
சர்வதேச விசாரணைகள் நடக்குமென்று
நம்பவைக்கப்பட்டீர்கள்

இவர்கள்தான் போர்க்குற்றவாளியாக்கப்படவேண்டும் என
உலக நாடுகளின் தலை நகரங்களில்
ஊர்வலம் போனீர்கள்

இப்போது எங்கும் சூழ்கிறது
இருளின் ஒரு கனத்த மெளனம்

வரலாற்றிற்கு
அறமென்று ஏதுமில்லை

குற்றங்களிலிருந்து பிறக்கும் அதிகாரம்
பின்புறம் கைகள் கட்டப்பட்ட
பிணங்களிலிருந்து பிறக்கும் அதிகாரம்
நிர்வாணமாக்கப்பட்ட உடல்களிலிருந்து பிறக்கும் அதிகாரம்
அகதிகளின் முடிவற்ற கதைகளின் மேல் பிறக்கும் அதிகாரம்

இது வரலாறே அல்ல
வெள்ளை வேன்களின்
வெற்றி ஊர்வலம்

17.11.2019
மாலை 5.11
மனுஷ்ய புத்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More