—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா
பரி. யோவான் பொழுதுகளின் கதைகள் நிகழ்ந்த யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின்( Jaffna St. John’s College ) வளாகத்திலே, ஜூட் பிரகாஷ் எழுதிய “பரி. யோவான் பொழுதுகள்” புத்தகத்தின் அறிமுக நிகழ்வு இடம்பெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் ஜூட் பிரகாஷின் “பரி.யோவான் பொழுதுகள்” நூல் எதிர்வரும் ஜனவரி 7, 2023 மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரி( Jaffna St. John’sCollege ) மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பரி யோவான் பொழுதுகள் நூலானது ஓர் முன்னாள் பள்ளி மாணவனின் பாடசாலை அநுபவங்களை எடுத்தியம்பும் நூலாகும். ஜூட் பிரகாஷின் “பரி.யோவான் பொழுதுகள்” நூலானது பள்ளியில் இருந்து விடைபெறும் வரலாற்றுடன் தொடங்கி, பின்னர் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பும் போது, நாங்கள் ஊரை விட்டு வரும் போது எது, எந்த இடத்தில், எப்படி இருந்ததோ, அது, அப்படியே, அங்கேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதனை நனவிடை புரிதலாக இந்நூல் அமைகிறது.
ஜூட் பிரகாஷின் கூற்றுப்படி ‘நாங்கள் ஊரை விட்டுப் பிரியும் பொழுது எங்களது எண்ணங்களும் நினைவுகளும் அந்த கணத்தில் உறைநிலைக்கு (freeze) போய் விடும். நாங்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பும் போது, நாங்கள் எந்த இடத்தில் ஊரை விட்டுப் பிரிந்தோமோ, அதே இடத்திலிருந்து எங்கள் ஊர் வாழ்க்கையை, எங்கள் நினைவுகளை, எங்கள் எண்ணங்களை மீளவும் ஆரம்பிக்க எங்கள் மனம் துடிக்கிறது.
பரி யோவானின் கம்பீரமான பிரதான நுழை வாயிலினூடாக கல்லூரிக்குள் மீண்டும் காலடி வைத்ததும், கண்கள் இடப் பக்கம் திரும்பி அந்தக் காலத்தில் அங்கே இருந்த, வெள்ளைச் சுண்ணாம்பு அடித்த நூலகத்தின்
அழகான முகப்பையும் தேடும்.
புதியன புகுதலும் பழையன கழிதலும் தான் வாழ்க்கை. புதிய முன்னேற்றங்களுக்கு வழி சமைக்க, பழையன வழி விட தான் வேண்டும், அது தான் நியாயம், அது தான் தர்மம், அது தான் நியதி. அந்த வகையில் பழைய மாணவனின் நினைவுகளை எடுத்துக் கூறி, பரி யோவானிற்கே உரித்தான வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றும் வண்ணமாக இந்நூல் வெளிவருகிறது.