நாள் ஒரு பொழுதிலே
பார்த்த ஒரு மாப்பிள்ளை
கை பிடித்து கொடுக்கும் வரை
கண்ணாலும் கண்டதில்லை
பழைய புகைப்படம் ஒன்று
கொண்டாங்கோ பாப்பம்
பாத்தென்ன செய்யப்போறாய்??
அவன் விஜயை பாத்தால் போல
நல்ல உயரம்,
உனக் கேற்றாப் போல!
குணம் நடையில் குறைவில்லை,
உன்னையும் மிஞ்சி!
வேகாத பொன் நிறமாம்
வேலைக்கும் கள்ளமில்லையாம்
நீ படிச்ச படிப்பென்ன,
பெரும்படிப்போட
பெட்டி நிறைய காசுமாம்
நல்ல வேலையாம்
நாய் தின்னா சோறாம்
இத விட வேறென்ன வேணும்
சும்மா வந்த சம்மந்தம்
விடாப்புடியா கட்டிப் போடோனும்
பாய் தலாணிய சுறுட்டி வை
கட்டில் மெத்தை காறி இனி,
சுளை சுளையா மாதம் வரும் காசு
சுத்தலாம் ஊருக்குள்ள இனி சொகுசா
சம்மந்தம் பேசி முடிக்க
பொழுது கறுத்த வேளை
ஒரு கோப்பை தேநீர்
குடியப்பு.. தாய் போட்ட கட்டளையில்
குடித்த ஒரு சொட்டும் கீழே விழ
மகனுக்கு குடிச்சு பழக்கம் இல்லை..
தாய் சொல்லு தட்டாதவன் என்ற
பெருமிதமாய் சிரித்த தந்தை
சிறிய மண்டபம்
தாமதமாய் வந்த மருமகன்
எடுக்க மறந்த கலியாணக் கூறை
அனுப்பியவர் வருவதற்குள்
முகூர்த்த நாள் கடந்து இரண்டு மணி
கைகால் நடுங்கி இடையே வழிந்த வீணியை
துடைக்க முடியாமல்
மயங்கி விழுந்த மாப்பிள்ளைக்கு
கல்யாணப் பயமாம்
அலட்சியமாய் சமாளித்த தாய்
தாலி கட்ட கழண்ட சுரையை
தேடியும் கிடைக்காமல்
சாறியின் ஊசியால் கோர்த்த இருமுனைகள்
கை உருண்டை சோற்றை பரிமாற
அமைதியாய் இருந்த மாப்பிளை
பொடியனுக்கு கூச்சம்,
வயிறு நிறைக்க வந்தவரின்
மங்கிய வார்த்தைகள் இரகசித்து ஒலித்தன
மறு வீடு போக அனுப்பி வைத்த அம்மாவின் கைகளில் கண்ணீரின் ஈரம், இனி நீ நல்லா இருப்பாய்
உச்சந்தலைவரை அவளின் பெருமிதம் இருந்தாலும் ஏக்கமாய் பார்த்தனுப்பினாள்
வாழ்ந்தாக வேண்டும் என்று
வலிந்து வாசலடி தாண்டவும் மறுபடியும்
மயங்கி விழுந்த மாப்பிள்ளை
அப்பா என்று ஓடிவந்த இரண்டு பிள்ளைகள்
அப்பாக்கு அந்த வெள்ளை பவுடரை குடுங்கோ
உள்ள போ… அதட்டிய மாமி!!
வாசலின் நேரெதிரே பூமாலைப்படம்
பார்த்த படி நிண்ட என்னை அதான் அம்மா, அப்பாதான் கொலை செய்தவர்..
உடலில் உணர்வற்று விழுந்தேன்
அத்தனையும் கனவுகளாய் கலைந்து
மீளவும் என் வீட்டில் ஆறுதலாய் – சொன்னாள் அம்மா
பிள்ளை ஒரு வெளி நாட்டு சம்மந்தமாம்….
முல்லையின் ஹர்வி