~ மவுன வதம் ~
நதியைக் கடக்க முயல்கிறேன்
கனவுச்சுழிக்குள் என் படகு மாட்டிக்கொள்கிறது
பெரு மழை பெய்ய ஆரம்பிக்கிறது
எதிர் நீச்சலிட்ட மீன்
வலைகளை அறுத்தது ஆயிரம்
மரணத்திற்கு தப்பிக்கவில்லை
இறப்பு சகிக்க முடியாத துக்கரமானது
நண்பனோ? எதிரியோ?
உயிர் பஞ்சு போல லேசானது இல்லை
காரிருள் பயணம்
கையில் சிறு தீபம்
விழிகள் தேடும் பாதை
.சிறகினில் உள்ளது சுதந்திரம்
விரி…பற…
கூண்டில் உன் மரணம் காத்திருக்கிறது
பின்னிய எண்ணங்கள் புடவையானது
வெட்கத்தினால் வண்ணமேறியது
கண்மணியே நீ உடுத்திக் களிக்கிறாய்
கோழிக் கூட்டிற்குள் மலைப்பாம்பு
எதுவும் தப்பவில்லை
மலைப்பாம்பாய் என்னுள் அவள்
கசப்பல்ல துப்பிவிட
இனிப்பல்ல விழுங்கிட
நவரசங்கள் தான் வாழ்க்கை
நீ ஜெயிக்கத் துடிக்கிறாய்
நான் வாழ ஆசைப்படுகிறேன்
தோல்வியில் நீ துடைக்கப்படுவாய்.
🦀
~ கனிந்து கொண்டிருக்கும் கனவுகள் ~
அந்த தோட்டத்திற்கு
வந்திருந்தன சில பறவைகள்.
பழங்களை புறமொதுக்கியபடி
இலை மொழியில் உரையாடின.
மழை பொழியும் அந்திகளில்
புராதன காலத்தின்
ஒளி மிக்க பொழுதுகளை
உள்ளார்ந்து பகிர்ந்தன.
மூடுபனி உலாவிடும்
மரங்களின் உச்சிகளில்
மெளனத்தின்
மென் கனவுகளைப் பாடின.
தூரத்து மலைகளுக்கு அப்பால்
வானவில்…!
வண்ணங்களை நெய்து கொண்டிருக்கிறது…
அந்தப் பறவைகளின் கூடுகளுக்காக.