நினைவேந்தலோடு
நின்றுவிடாதபடி
நீளும் பயணத்தைத்
தொடர்வமெனத் துணிவோடு
அனைவரையும் அழைக்கிறது
ஆர்வமுள்ள இளங் கூட்டம்!
ஆளுமைகளோடு
ஓங்கியுயர்ந் தெழுங்கூட்டம்!
தனையுணர்ந்து தனைப் பெற்றோர்
தாயகத்தின் நிலையுணர்ந்து
தோளுயர்த்தி நிற்கிறது
தூய்மைநிறைத் தமிழ்க் கூட்டம்!
‘இன-உணர்வாம்’இவருணர்வால்
இவ்வுலக அரங்கினிலே
ஈழத்தாய் இறைமைதனை
எடுத்துரைத்தல் எளிதாமே!
சுயநலத்திற் சிக்குண்டு
சூழ்ச்சிகளாற் சிதறுண்டு
கயமைகளிற் கட்டுண்டு
காழ்ப்புணர்விற் கரைகண்டு
செயலொன்று சொல்லொன்றாய்
வீழ்ச்சிகண்ட எமக்காகத்
தமையிழந்து போராடித்
தம்முயிரைத் தாமீந்து
தாயகத்தின் கனவோடு
தம்மண்ணில் விதையான
அனைவர்க்கும் நாம்செய்யும்
அரும்பணிகள் பலவுண்டு!
அவர்கனவு மெய்யாகச்
செய்வது எம் பணி இன்று!
தினையளவோ.. அணுவளவோ..
திறனெதுவோ.. பலமெதுவோ..
மனமுவந்து அறம் செய்து
மானுடத்தைக் காப்போமே!
| புலவர் சிவநாதன்