Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மண்ணீரல் வீக்க பாதிப்பிற்கு மண்ணீரலை அகற்றுவது சரியான தீர்வா?

மண்ணீரல் வீக்க பாதிப்பிற்கு மண்ணீரலை அகற்றுவது சரியான தீர்வா?

2 minutes read

எம்மில் சிலர் அறிகுறிகளை வெளிப்படுத்தாத மண்ணீரல் வீக்க பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதனை தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறிந்து உரிய முறையில் சிகிச்சை எடுத்தால், நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் மண்ணீரலை மீண்டும் இயல்பான நிலையில் செயல்பட வைக்க இயலும். ஆனால் உரிய தருணத்தில் மண்ணீரல் வீக்க பாதிப்பை கண்டறியாதிருந்தால், அதனால் பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

எம்முடைய வயிற்றின் இடதுபுற மேல் பகுதியில் விலா எலும்புகளுக்கு கீழ் மண்ணீரல் எனும் உறுப்பு அமைய பெற்றுள்ளது. இவை எம்முடைய உடலில் உள்ள பழைய மற்றும் சிதிலமடைந்த ரத்த அணுக்களை வடிகட்டி, அதனை அழிக்கிறது. வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து தொற்று நோய்களை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முதன்மையான காரணியாக இவை செயல்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்களையும், இரத்த தட்டணுக்களையும் சேகரித்து ரத்தம் உறைவதற்கு உதவி புரிகிறது. இத்தகைய இன்றியமையாத பணிகளை மேற்கொள்ளும் இந்த மண்ணீரல் ஏதேனும் சில காரணங்களால் பாதிக்கப்பட்டு, அவை வீக்கமடைந்தால், மேற்கூறிய அதன் தொடர்ச்சியான பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

மண்ணீரல் வீக்க பாதிப்பை மருத்துவ மொழியில் ஸ்ப்ளெனோமேகலி ( Splenomegaly) என குறிப்பிடுகிறார்கள். அடிக்கடி தொற்று பாதிப்பிற்கு உள்ளாகுபவர்கள், எளிதில் ரத்தப்போக்கு உடையவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டவர்கள், இடதுபுற மேல் வயிற்றுப் பகுதியில் வலி உண்டாகி… இடது தோள்பட்டை வரை பரவினால் உங்கள் மண்ணீரல் பாதிப்படைந்து இருக்கிறது என பொருள் கொள்ளலாம்.

அறிகுறிகளை எளிதாக வெளிப்படுத்தாத இந்த பாதிப்பினை மருத்துவர்கள் ரத்த பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிகிறார்கள்.

இதற்கு மருத்துவர்கள் எம்மாதிரியான காரணங்களால் மண்ணீரல் வீக்கப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை அவதானித்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். முதலில் மருத்துவர்கள் சிகிச்சைகளை அளித்து ஓராண்டு வரை மண்ணீரல் வீக்க பாதிப்பை கண்காணிக்கிறார்கள். அதன்  பிறகும் மண்ணீரல் வீக்க பாதிப்பால் நோயாளிக்கு தொடர் அசௌகரியம் ஏற்பட்டால், அதனை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.

அதே தருணத்தில் மண்ணீரல் வீக்கம் காரணமாக அந்த உறுப்பினை அகற்றுவதற்கு பின் நோயாளிக்கு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து முழுமையான விழிப்புணர்வை மருத்துவர்கள் வழங்குவார்கள். ஏனெனில் மண்ணீரல் எனும் உறுப்பை அகற்றி விட்டால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலில் சமச்சீரற்ற தன்மை ஏற்படும். இதனை தற்காத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். பின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஆயுள் முழுவதும் மருத்துவரின் கண்காணிப்புடன் வாழ வேண்டியதிருக்கும். சிலருக்கு இதன் காரணமாகவே பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சிலருக்கு இதன் காரணமாகவே காய்ச்சல் ஏற்படும்.

டொக்டர். முத்துக்குமார்

தொகுப்பு அனுஷா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More