சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது செயற்குழுவில் யாரும் என்னை பதவி விலகும்படி எந்த உறுப்பினரும் கேட்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து விலகிய சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே, ஐ.பி.எல். சேர்மன் பதவியில் இருந்து விலகிய ராஜீவ்சுக்லா ஆகியோர் தங்கள் பதவியில் தொடர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.
அவர்கள் நாளை பதவிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். செயற்குழு கூட்டத்தில் என்னை பதவி விலகும் படி பிந்த்ரா கோரவில்லை.
கூட்டம் சுமூகமாக நடந்தது. யாரும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
அஜய் ஷிர்கேவின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஷிர்கே, ஜக்தாலே திரும்ப வேண்டும் என்பது எங்களின் ஒருமித்த முடிவாகும். ஷிர்கே எனது சிறந்த நண்பர். அவரும், ஜக்தாலேவும் நாளை திரும்புவார்கள்
சூதாட்ட விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நான் ஒதுங்கி இருப்பேன். எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட்டில் சூதாட்ட குற்றச்சாட்டு பெரும் புயலைக் கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் எத்தனை பேருடைய பதவிகள் ஆட்டம் காணப்போகுதோ?