பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமை தொடர்பாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப் பிரதிநிதித்துவ மட்டம், மற்றும் பொதுநலவாய மாநாட்டில் இருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விலகிக் கொள்வது தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு இன்று தெரியப் படுத்தப்படவுள்ளது என ஆங்கில செய்திச் சேவை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளதுடன், கொழும்பு மாநாட்டில் பங்கேற்பு குறித்து தீர்மானிக்கும் போது அதனைப் பயன்படுத்த கூடுமெனவும் தி இகனோமிக் டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அதாவது வட புலத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிறுபான்மைச் சமூகத்தினருக்கான ஆதரவை வழங்குவதாகக் காட்டிக் கொள்ளும் பாவனையில் கலாநிதி மன்மோகன் சிங் மேற்படி மாநாட்டில் பங்கேற்பதற்கென கொழும்புக்கு விஜயம் செய்யலாம். இந்திய அரசின் இக்கட்டான இந்த நிலைமை தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சியின் ஆயுளுடன் சம்பந்தப்பட்டதாகவே நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும் இந்திய காங்கிரஸ் அரசு தனது நலனுக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களை அணுகியுள்ளதா என ஐயம்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பும் இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளும் இதனைப் புலப்படுத்துகின்றது.
வட மாகாண முதலமைச்சரின் இந்த வேண்டுகோள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ள வேளையிலும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், அது தொடர்பான அறிவிப்பை உறுதியோடு அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.