கிளிநொச்சி முழங்காவில் இணைக்கும் பிரதான வீதி இதுவரை திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் இந்த வீதி ஊடாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் கடும் துன்பப்படுகின்றனர். இந்த வீதி தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்க வில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முறிப்பு பகுதியிலிருந்து முழங்காவில் வரையில் வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. தற்பொழுது மழை காலம் என்பதனால் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
வீதியில் பேருந்துகள் செல்லும்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றது. சேதமடைந்த வீதியில் பயணிப்பதன் மூலம் நீண்ட நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் குன்றும் குழியிலும் பேருந்து செல்வதால் தாம் பெரும் இடர்களுக்கு முகம் கொடுப்பதாகவும் பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி ஊடறுத்துச் செல்லும் கோணாவில், ஸ்கந்தபுரம், ஆனைவிழுந்தான், வன்னேரி, ஜெயபுரம், முழங்காவில் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த வீதி பிரதான வீதியாகும். வீதியால் பாடசாலை மாணவர்கள் நடந்து செல்லக் கூட முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் வசந்தம் வீசுவதாகவும் வீதிகள் எல்லாம் புனரமைக்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் பயணிப்பதாகவும் அரசு பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த வீதியில் வீசுவது வசந்தமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த பல வருடங்களுக்காக இந்த வீதி இவ்வாறே காணப்படுகின்றது. யுத்தத்தாலும் இடப்பெயர்வுகளாலும் பாதிக்கப்பட்ட இந்த வீதியை புனரமைக்காது இருப்பது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக –